×

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-ன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.5,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதுகுறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது. அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு, நிறுவனத்திற்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள், சேவைகள் மீதான விளம்பரங்களுக்கு தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அத்தகைய தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com’’ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

The post இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...